Thursday, November 14, 2013

என் இனிய பொன் நிலாவே...

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா - பொது அம்சம் - இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ' உங்களுக்கு பாட வருமா?'
'கொஞ்சமா' பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

'இரட்டுற மொழிதல்' என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

2 comments: