Monday, April 28, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 10 - மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது அந்தக் குரலில் உள் ஒலிந்திருக்கும் வலிகள், அழுத்தங்கள், காயங்கள், சொல்லொண்ணா துயரங்கள்.

பெண்ணுக்கான மன வலிகள் எப்போழுதும் தனித்தே இருக்கின்றன.

ஒரு அழகிய வீணையின் இசையுடன் பாடல் ஆரம்பமாகிறது.
கண்ணதாசன் வரிகள் ஆரம்பம் ஆகின்றன.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி

மாலைப் பொழுது பெரும்பாலும் மயக்கம் தருவதாகவே இருக்கும். நாளுக்கான முடிவின் தொடக்கம் அல்லவா. அப்போது கனவு காணுவதாக தோழியிடம் உரைக்கிறாள். அச்சம், நாணம் போன்ற குணங்கள் சேர்ந்து தன் மனதில் தன்மையை மாற்றி வார்த்தைகள் அற்றுச் செய்து விடுகிறதாக உரைக்கிறாள்.

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி

இன்பமும் துன்பமும் கலந்தே வாழ்வு. அதைப் போன்றே வாழ்வு அமைகிறது என்று என்னிடன் உரைத்தவர் யார்?. கவிஞனின் கற்பனை இங்கு மிக அழகாக விளக்க்கப் பட்டிருக்கிறது. இன்பம் நிஜமற்ற கனவிலும், துன்பம் நிதர்சமான உண்மையிலும் தான் காண்பதாக உரைக்கிறாள்.

மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தே நான் வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி

தனக்கான காந்தர்வ விவாகம் நடந்து விட்டதை தெரிவுக்கிறாள். அவர் என்னை மணம் முடித்தது போல் அவரின் வடிவம் கண்டேன். மங்கையான என்னிடம் குங்குமம் தந்தார், மாலையிட்டார்.இவைகள் பெரும்பாலும் கணவர்கள் செய்யும் காரியம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறாள். இதனால் நான் செல்லும் (வாழ்க்கை) வழியை மறந்துவிட்டேன்அவரிடம் அடைக்கலம் ஆனேன். அப்போது மறவேன் மறவேன்  என்று கூறி மறைந்து விட்டார் என்கிறாள். (வார்த்தைகள் இரு முறை கூறப்படும் போது அது சத்தியம் ஆகிறது, இவ்வாறு சத்யம் செய்து மறந்து விட்டதைக் குறிப்பிடுகிறாள் தலைவி)

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் - அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம் ((துக்கடா)இசைஞானிக்கு பிடித்த வரிகள்

இப்படி கனவு வாழ்வில் வந்தது யார் என்று கேட்கிறாள். அனைத்து பதில்களும் உரைக்கப் படுகின்றன.

கொஞ்சு தமிழின் அழகியல் விளையாடத் துவங்குகிறது. இளைமை வெறும் கனவாகவே இருக்கிறது அதுவும் மறைந்திருக்கிறது. அறிவு தெளிவு அறியாமல் இருக்கிறது. முடிவும் எடுக்கவும் முடியாமல் இருக்கிறது. இவ்வாறான நிலையில் எதிர் காலம் மயக்கம் தருவதாக இருக்கிறது என்பதை உரைக்கிறாள்.

இடை இடையே வரும் வரும் இசை அந்த வலிகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.

(தத்துவார்தகமாக பார்த்தால் ஜீவாத்மா, பரமார்த்தாவை அடையத் துடித்தலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கொள்ளலாம்)

இப்பாடலைக் கேட்டு ஈரத் தலையனையுடன் உறங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும்.

யாருமற்ற இரவில் தனிமையில் இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மனதில் வலிகள் எல்லாம் ஒரு பாடலாக உருப்பெற்றிருப்பதை அறியலாம்.

இப்பாடல் புகைவண்டிப் பயணத்தில் யாசம் விரும்பி கேட்டுச் செல்லும் கண்கள் அற்றவனில் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் வரிகள் உறுத்துவதை உணரமுடியும்.

ஏனெனில் வலிகள் அனைவருக்கும் பொதுவானவை தானே.


No comments:

Post a Comment